எதிரிகள் கூட ஏக்கப் பெருமூச்சுடன் பார்க்கும் இன்றைய பிரபல
இந்திய அரசியல் தலைவர் நரேந்திர மோதி. அவரது அரசியலை விமர்சிக்கும்போது
காரசாரமாகும் கூட்டத்தினர், அவரது ஆட்சித்திறனை விமர்சிக்கும்போது கப்சிப்
ஆகிவிடுகிறார்கள். இல்லையேல் மென்று முழுங்குகிறார்கள். மோதியின் சாதனை உயரம்
அப்படி. இந்தச் சாதனையும், பல சோதனைகளைக் கடந்து வந்ததுதான்.
இந்தச் சாதனைக்காகவே அவர் மீதான குற்றச்சாட்டுகள் மறுதலிக்கப்பட
வேண்டியவையா? அப்படிக் கூற முடியாது. அவை
ஆழ்ந்து பகுத்தறியப்பட வேண்டியவை. மோதி மதவாதி என்பது பரவலான ஒரு குற்றச்சாட்டு.
இதற்கு பலர் எடுத்துக்காட்டும் உதாரணம் குஜராத் கலவரம். ஆனால் அது நிகழக் காரணமான
கோத்ரா ரயில் எரிப்பும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்துவரும் குண்டுவெடிப்புகளும்
எதன் அடிப்படையிலானவை என்பதை இந்த மத எதிர்ப்புவாதிகள் விமர்சன வளையத்திற்குள் உட்படுத்துவதில்லை.
காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டினர் அகதிகளாக வெளியேறி மற்ற
மாநிலங்களில் தஞ்சம் புக நேர்ந்ததற்கும், தற்போது வங்கதேசத்தில் இருந்து
புகுந்தவர்களால் அசாமில் நிகழ்ந்த வன்கொடுமைகளுக்கும் மதவாதம்தான் அடிப்படை என்பதை
நேர்பட விமர்சிக்கவோ அந்த பிரச்சனைகளுக்கு நேர்மையாகத் தீர்வு காணவோ யாருக்கும்
துணிவு இல்லை.
இவையெல்லாம் மோதியின் மீதான மதவாத குற்றச்சாட்டுகளை
துடைப்பதற்கான தற்காப்பு உத்தி என்று சிலர் கூறலாம். ஆயின் இங்கு இவற்றைச் சுட்டிக்காட்டியதற்குக்
காரணம், அரசியல் ரீதியில் எழுப்பப்படும் மதவாதம் என்ற புகார், சத்தியத்தை சாரமாகக்
கொள்ளாமல் சந்தர்ப்பவாதத்தை சார்ந்து இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே.
மேலும், குஜராத் கலவரத்தை மோதிதான் தூண்டிவிட்டார் என்று
அரசியல் ரீதியில் எழுப்பப்படும் புகார், நீதிமன்றங்களில் இன்னமும்
நிரூபிக்கப்படவில்லை. அத்துடன், உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்
குழு, கலவரத்தை மோதி தூண்டவில்லை, அடக்கத்தான் முயன்றார் என நற்சான்று தந்துள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த அந்தக் கலவரத்துக்குப் பின் மதரீதியாக
எந்த பெரும் பிரச்சனையும் அம்மாநிலத்தில் எழவில்லை. குஜராத் கலவரத்தால் அதிகம்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில்தான் தற்போது சமூக
ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார்கள் என மத்திய
அரசின் புள்ளிவிவரங்களே பகர்கின்றன. இதனை துக்ளக் நிருபர் இதயா நேரடியாகப்
பார்த்து பல வாரங்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
ஆகையினால் மோதி மீதான மதவாத முத்திரை, நிரூபிக்கப்படாத ஒரு
புகாரே அன்றி, நிரூபணமான உண்மையல்ல என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மோதியை
பார்ப்பதே பாவம், அவரைப் பற்றிப் பேசுவதே தீது என்ற ரீதியில் செயல்படுவதுதான்
ஒருசிலரின் அரசியலாக இருக்கிறது. இதற்கோர் உதாரணம் நயீ துனியா உருது நாளிதழுக்காக
மோதியை பேட்டி எடுத்த அதன் ஆசிரியர் சாஹித் சித்திகி சமாஜ்வாதி கட்சியில் இருந்து
ஓரம் கட்டப்பட்டுள்ளார். எனவே மோதி மீதான மதவாதி என்ற குற்றச்சாட்டில், காரம்
இருக்கும் அளவுக்கு சாரம் இல்லை.
அதேநேரத்தில், மோதி மீதான மற்றொரு குற்றச்சாட்டு, அவர்
தனிமனித துதியை அரசியலில் வளர்க்கிறார் என்பது. தனிமனித துதி அரசியல், தமிழகம்
உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும், காங்கிரஸ் கலாச்சாரத்துக்கும் புதியதல்ல. ஆனால்
ஆரோக்கியமான அரசியலுக்கு அது ஏற்புடையதல்ல. அதிலும் தனி மனிதனைவிட கட்சி பெரிது
என்றும், ஒற்றைத் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமை என்பதையும் வலியுறுத்தும் பாரதீய
ஜனதா கட்சியில் தனிமனிதரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் முற்றிலும் புதிது.
இதனை நரேந்திர மோதி வளர்க்கிறாரா? ஆம் என்கிறார் குஜராத்
முன்னாள் முதல்வரும் அண்மையில் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்த மூத்த தலைவருமான கேஷுபாய் படேல்.
குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் இந்த கேஷுபாய். மேலும் படேல்
என்ற குஜராத்தின் சக்தி வாய்ந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நரேந்திர மோதியும்
பிற்பட்ட வகுப்பினர் என்றாலும், அவரது மோதி வகுப்பு, வாக்குவங்கி அதிகம் இல்லாத அகர்வால் ஜாதியின் உட்கிளை. இந்த
ஜாதிக் கணக்கை அரசியல்வாதிகள் பார்க்கிறார்களோ இல்லையோ, சில மாதங்களில் குஜராத்
தேர்தல் வர இருப்பதால் அரசியல் விமர்சகர்கள், வாக்குக் கணிப்பாளர்கள் கட்டாயம்
கவனிப்பார்கள்.
கேஷுபாய் படேல் பிரிந்ததால் படேல் ஜாதியின் வாக்குகளை
மோதியும், பா.ஜ.க.வும் இழக்க நேரிடும் என்று அவர்கள் கூறலாம். அதைப்பற்றி விமர்சிப்பது
நமது நோக்கமல்ல. ஆனால், கேஷுபாய் கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பதே நமது
கேள்வி.
மூன்று முறை தொடர்ந்து குஜராத்தில் முதலமைச்சராக இருக்கும்
மோதி, அதன் காரணமாகவே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். குஜராத் வளர்ச்சிப்
பணிகள் சார்ந்த விளம்பரங்களில், மோதிக்கான விளம்பரமும் தூக்கலாக இருப்பதை
மறுப்பதற்கில்லை. பா.ஜ.க-வில் நிலவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோதியும்
முந்திச் செல்கிறார். அதேநேரத்தில் குஜராத்தின் பலமான தலைவர் என்ற தோற்றத்தையும்
ஏற்படுத்தி வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. பிரச்சாரகராக
பொது வாழ்வுப் பயணத்தைத் தொடங்கிய மோதி, வகேலாவுடன் கைகோர்த்து குஜராத்தில்
பா.ஜ.க-வை வளர்த்தார். கேஷுபாய் படேல் முதல்வராக இருந்தபோது எழுந்த பிரச்னையை தீர்க்க
சமரசப் பணியில் ஈடுபட்ட மோதி, பின்பு தானே முதல்வரானார். அவரை எதிர்த்து அரசியல் செய்த
வகேலா காங்கிரசில் கரைந்துவிட்டார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது இப்போதுபோல் நேரடியாக இல்லாமல்,
மறைமுகமாக மோதிக்கு எதிராகச் செயல்பட்டார் கேஷுபாய்.வி.ஹெச்.பி-யும் தன்
பங்குக்கு இடைஞ்சல் செய்தது. இவற்றை மீறி மூன்றாம் முறையாக முதலமைச்சரானார் மோதி.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் அவருக்கு நான்காவது
வாய்ப்பளிக்குமா? இதன்மூலம் அவரது தேசிய அபிலாசையில் (பிரதமர் பதவிக் கனவில்) அவர்
முன்னே செல்வாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு பல பலவீனங்கள்
இருந்தாலும் அதற்குக் கைகொடுப்பது நேரு-இந்திரா காந்தி குடும்பத்து இமேஜ்தான். அந்த
இமேஜ் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி, தண்ணீரில் இருந்து எடுத்துப்போட்ட
மீனாகிவிடும். ஓரளவு இமேஜ் இருந்ததால்தான் வாஜ்பாய், பா.ஜ.க. சார்பில் பிரதமராக
முடிந்தது.
தனிமனித மயக்கம் மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றபோதிலும்,
தனிமனித செல்வாக்குதான் இந்திய அரசியலில் அந்தக் காலம் முதலே கோலோச்சி வருகிறது.
மகாத்மா காந்தியின் காந்த சக்தி, நேருவின் வசீகரம் ஆகியவை எல்லாம் மக்கள் கூட்டத்தைச் சேர்க்கப் பயன்பட்டன. காந்தி தனது செல்வாக்கை தனது சுய அரசியல் லாபத்திற்காக
பயன்படுத்தவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்தவர்கள் அரசியல் வளர்ச்சிக்கு,
ஆட்சியைப் பிடிப்பதற்கு தனி மனித செல்வாக்கைப் பயன்படுத்தினார்கள், அதனை
வளர்த்தார்கள்.
இந்திய அரசியலில் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும்
செல்வாக்கு இல்லாவிட்டால் செல்லாக் காசுதான். ஆகையால் தனிமனித செல்வாக்கு அரசியல்
வெற்றிக்கு அவசியமாகிறது. அதனை மோதி பயன்படுத்தினால், அதனை குறை கூற முடியாது. ஆனால்
அதுவே தனிமனித துதியாக மாறினால் தாங்க முடியாது. அதற்கோர் உதாரணம் இந்திரா
காந்தியின் அரசியல்.
ஆகவே, வாக்குக்காக தனிமனித செல்வாக்கு என்ற தலைப்பாகையை
மோதி அணிவதில் தவறில்லை. அதேநேரத்தில் அது தலையையே நசுக்கிவிடும் தலைச்சுமையாக மாறாமல் அவர்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பத்மன்
மோதி போன்ற திறமைசாலி தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டுமென்பது இன்றைய இளைஞர்களின் கருத்து ... அவரின் நிறை குறைகள் இரண்டையும் நடுநிலையோடு அலசியிருக்கிறீர்கள் ...
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்குநல்ல அலசல்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_10.html) சென்று பார்க்கவும். நன்றி !
நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி.
நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன். தங்கள் அறிமுகத்துக்கு மகிழ்ச்சி. தங்கள் வலைத்தளத்தை நிச்சயம் பார்த்து கருத்துரைக்கிறேன். நட்பு தொடரட்டும்.
நீக்குமோதியை பற்றிய நடுநிலை அலசல் , வரவேற்க தக்கது . நன்றி
பதிலளிநீக்கு